Thursday, February 6, 2025

சாகடிக்கப்படும் உயிரின தொடர்ச்சி மனித இனத்தின் வீழ்ச்சி

சாகடிக்கப்படும் உயிரின தொடர்ச்சி மனித இனத்தின் வீழ்ச்சி

இளங்கதிர் கோ

மனிதன் தொடர்ந்து இந்த உலகத்துல வாழனமுன்னா , உலகத்துல இருக்குற மத்த எல்லா உயிர்னங்களோட சார்பு கண்டிப்பா தேவப்படுது !!
ஆனா, உலகத்துல இருக்குற எந்தவொரு உயிரினத்துக்கும் தன்னோட வாழ்க்கைய நடத்த மனிதனோட சார்பு 1% கூட தேவப்படுறது இல்ல !!

இத நாம புரிஞ்சுக்காம, இயற்கைய அப்படியே ஏத்துக்காம, "கம்பங்காட்ட பாத்த மாடு மாதிரி" அவசர அவசரமா எல்லாத்தயும் அனுபவிச்சுட்டு அழிச்சுட்டு வர்றோம். இந்த வேகத்துல நாம நம்ம வேலைய
சிறப்பா செஞ்சுட்டே போனோம்னா இன்னும் 20 - 30 வருசத்துக்குள்ள குறிப்பிட்ட அளவுக்கான உயிரினங்கள "அரிதான உயிரினங்கள்" பட்டியல்ல இணைச்சுடுவோம் வெற்றிகரமாக.! ஏற்கனவே நம்ம கண்ணு
முன்னாலயே காணாம போன சிட்டுக்குருவி ,தூக்கணாங்குருவி ,தேன்சிட்டு ,பொன்வண்டு ,தட்டான் (தும்பி) ,சில வகை பாம்பு இனங்கள் பட்டியல்ல கூடிய சீக்கிரம் யானை-யையும் தேனீ-யையும்
இணைச்சுடுவோம்.



அடடா! நம்ம திருவிளையாடல் கொஞ்சமா ? எப்புடி எப்புடி எல்லாம் தினுசு தினுசா வேல செஞ்சு கொஞ்சங்கூட வெ.மா.சூ.சொ இல்லாம அந்த உயிரனங்களின் இருப்பு மற்றும் தேவை புரியாம ரொம்ப சுலபமா
அழிச்சுட்டோம். அதுக்கப்புறம் "அய்யோ பாவம் இப்படி அழிஞ்சுபோச்சே!" ன்னு வருத்தமும் படுவோம், அப்புறம் அதே உயிரினங்கள காப்பாத்த போரேன்னு பெரிய வெண்ணைங்க மாதிரி கெளம்பிடுவோம்...

உங்க பொங்கச்சோறும் வேணாம்! பூசாரித்தனமும் வேண்டாம்! தங்களது சரீரத்தின் அனைத்து வாயில்களையும் சாத்திக்கிட்டு கம்முன்னு இருந்தலே போதும் அதுங்களே பொழச்சுக்கும் !! :)

இயற்கை ஒவ்வொரு உயிரினத்தையும் உருவாக்கி ஒன்ன ஒன்னு சார்ந்து இருக்கும்படி அமைச்சு தன்னோட சமநிலையை இந்த உலகத்துல தொடர்ந்து தக்க வெச்சுக்குது. ஆனா அதே இயற்கை கடைசில ஒரு
கருமாந்திரத்தயும் (மனிதன்) படைச்சிருக்கு பாருங்க, அய்யய்யோ அது பண்ற அலப்பற தாங்க மிடில!! பல கோடி வருசம் சிரமப்பட்டு உணவு சுழற்ச்சி முறையையும், ஒன்ன ஒன்னு சார்ந்து உயிர் வாழும்
முறையையும் உருவாக்கி வெச்சா! நம்மாளு அதையெல்லாம் அசால்ட்டா 100 வருசத்துல  அடிச்சு காலி பண்ணிட்டு "பாஸ் நம்ம அடுத்த ஆபரேசன் என்ன ?"  ன்னு கேட்டுக்கிட்டு நிக்குறான்.

"அடியேய் மாப்ள ! அடுத்த ஆபரேசன் உனக்குத்தான்டி"  தயாரா இருந்துக்கோ !! :)



"இப்படியே போய்கிட்டே இருந்தா இதுக்கொரு முடிவே இல்லயா" ன்னு நம்ம வடிவேல் கேக்குறமாறி, இயற்கை ஒரு நாளைக்கு மொத்த மனித இனத்தையும் கூண்டோட கைலாசம் அனுப்பிட்டு தன்னோட செல்ல
பிள்ளைங்களோட மகிழ்ச்சியா இருக்கபோவுது !!. :)

சரி நம்ம சப்ஜெக்ட்டு திருவாளர்.யானை க்கு வருவோம்... இந்தியாவிலேயே அதிக செழிப்புடன் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள் தான் யானைகளின் சொர்க்கபூமி.  அந்த மலைத்தொடர் உருவாகி
கிட்டத்தட்ட 180 கோடி வருசம் ஆகிருச்சாம் அதுல நம்ம ஆசிய யானைகள் கொறஞ்சது 50 கோடி வருசத்துக்கும் மேல இங்க வாழ்ந்துட்டு வருதாம் !! நமக்கெல்லாம் சீனியர் அதுங்கதான். அத சார்ந்து தான்
நெறையா உயிரினங்களோட வாழ்க்கை சுழற்ச்சியும் நடைபெறுது(மனிதன் உட்பட). மேற்கு தொடர்ச்சி மலைகள்ல இருக்குற பல்லாயிரம் மரங்கள், யானையின் உணவு தேடி அலையும் வாழ்க்கை முறை
மூலம் அதன் கழிவிலிருந்து முளைத்து வளர்ந்து காடாகியுள்ளது. அந்த அளவுக்கு அருமையான ஒரு உயிரினம் தன்னையும் பாதுகாத்துக்கிட்டு இயற்கை சூழலையும் அழியவிடாம பாதுகாத்துக்கிட்டு வருது...



ஆனா மிஸ்டர் மனுசன் குறைந்தபட்சம் அவனுடைய தேவைக்காகவாவது ஒரே ஒரு மரத்த கூட நட்டு வளர்க்க துப்பில்லாம வளந்து நிக்கறதையும் பாதுகாக்க துப்பில்லாம, பாக்கெட்ல அடைச்சு விக்கிறத
வாங்கி தின்னுட்டு திரியரான். அது மட்டுமா, மலைக்கு ஜாலி ட்ரிப் போரேன் பிக்னிக் போரேன்னு ஒரு ஊரே கெளம்பி போய் கூடி குடிச்சு கும்மாளம் அடிச்சுட்டு கொண்டு போன பிளாஸ்டிக் காகிதம், சரக்கு
பாட்டில், காண்டம் கண்றாவினு தங்களோட எல்லா குப்பைகளையும் மலை மேலேயே போட்டுட்டு தூய ஆவிகளா திரும்பி வந்திரானுங்க. ஆனா அங்கயே வாழுற குரங்கு,மான்,காட்டெருமை மற்றும் யானை
போன்ற உயிரினங்களுக்கு அந்த குப்பைங்கெல்லாம் ஏதோ ஒரு உணவுனு நெனச்சு அப்படியே சாப்பிடுதுங்க. சாப்பிட்ட பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் செரிமாணமே ஆகாம அதுங்களோட செரிமாண
மண்டலத்த்யே பாதிச்சு பசியே எடுக்காம வயிறு உப்பி ரணப்பட்டு கடைசிலே செத்தே போயிடும் அந்த அப்பாவி உயிரினம். அது போலவே சாராய பாட்டில் யானையோட கால்ல குத்தி சீழ் புடிச்சு நடக்க
முடியாம உணவும் தேட முடியாம பசியால செத்துபோகும். இதோட விட்டானா, சொகுசா வாழனும்னு மலைமேல இருக்குற இடத்த ஆக்கிரமிப்பு செஞ்சு வீடு,பன்ணை நிலம்,ஓய்வெடுக்கும் பங்களா அப்பிடி இப்பிடினு எக்கச்சக்கமா கட்டிடத்த கட்டி யானைகளோட தொன்மையான வழித்தடத்த மறிச்சு அதுங்க உணவு தேட முடியாம செஞ்சுட்டான்.

இவ்வளவு சிரமத்தலயும் உணவு தேடியே ஆக வேண்டிய சூழ்நிலையில் யானைங்க வழி மாறி தெரியாம இந்த துஷ்டனுங்க இருக்குற பக்கம் வந்துட்டா போதும், உடனே "யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்"
னு தலைப்புசெய்தி-ல வர அளவுக்கு அத வெரட்டு வெரட்டுனு வெரட்டி அடிப்பானுங்க, உண்மையில "மனிதர்கள் காட்டுக்குள் புகுந்து வீடு கட்டி அட்டகாசம்" னு தான் செய்தி போடனும். வெடி வெச்சு, மின்சாரம்
வெச்சு , வெரட்டி அடிச்சதுல ஓடுன யானை புகைவண்டில அடிபட்டு-னு தினமும் எதோ ஒரு வழியில சாகுதுங்க பாவம். இதுல கொடுமை என்னன்னா ஒருத்தன் மலைல ஆசிரமம் கட்டுரேன்னு சுத்தியும் 150
ஏக்கருக்கும் மேல வளச்சுப்போட்டு எல்லா அரசுக்கும் பணத்த குடுத்து காட்ட அழிச்சு கட்டிடமா கட்டி வெச்சிருக்கான், அவன் ஆசிரமம் கட்டியிருக்குற மொத்த இடமும் 50,000 வருசங்களுக்கு முன்னாடி இருந்தே யானைகளோட உணவு தேடும் முக்கிய வழித்தடமா இருந்தது. ஆனா இப்போ அத நம்மாளு பறிச்சு ஆசிரமம் கட்டி வாங்க சார் யோக சொல்லித்தர்றேன் மத்தவனுங்க எழுதி வெச்ச கதைய காப்பியடிச்சு உங்களுக்கு உபதேசம் வழங்குறேன்னு கோடி கோடியா கொள்ளையடிச்சுட்டு இருக்கான். இன்னும் சில பேர் இதே மலை அடிவாரத்துல ஆசிரமங்களும், கல்லூரிகளும் கட்டி வெச்சு ஊர அடிச்சு உலைல போட்டுட்டிருக்கானுங்க. அது அத்தனையும் காட்டுல வாழுற உயிரனங்கள் வாழ்க்க நடத்திட்டு இருந்த இடம்.

ஊருக்குள்ள நுழையுற காட்டு விலங்குகளை எப்படி கையாளனும்னு போய் வெளிநாட்டுல பாருங்க, அத்துனை தொழில்நுட்பத்தையும் வெச்சு அதுங்கள உயிரோட காட்டுக்குள்ள திருப்பி அனுப்பி வெப்பாங்க,
ஆனா இங்க அத புடிச்சு கூண்டுக்குள்ள போட்டு அடச்சு அத உளவியல் ரீதியா கொடும செஞ்சு கடைசில அது செத்து தான் காட்டுக்கு திரும்பி போகும். வெளிநாட்டுக்காரனுக்கு தெரிஞ்ச்சிருக்கு இந்த
உயிரினங்கள் அழிஞ்சா அதன் தொடர்ச்சியா நாமும் அழிஞ்சு போய்டுவோம்னு. அவன் தான் செஞ்ச தப்பிலிருந்து பாடம் கற்றுக்கொண்டான், ஆனா நாம இன்னும் கொஞ்சமும் பொறுப்பில்லாம, சுற்றுச்சூழல்
அறிவில்லாம என்னமோ நாமதான் உலகத்துலயே உயர்ந்த படைப்புன்னு முட்டாள் தனமா சொல்லிட்டும் ஆட்டிக்கிட்டும் திரிஞ்சுட்டும் இருந்தோம்னா இயற்கைக்கு நாம தேவையில்லாம போய்டுவோம்
நம்மள முற்றிலுமா இந்த பூமில இருந்தே தொடச்சு எறிஞ்சுறும்...

அதனால திரும்ப சொல்றேன், மனுசனுக்கு தொடர்ந்து உயிர் பிழைக்க உலகத்துல வாழுற மற்ற எல்லா உயிரனங்களோட சார்பு கண்டிப்பா தேவை !! ஆனா எந்தவொரு உயிரனத்துக்கும் தான் தொடர்ந்து வாழ
மனுசனோட சார்பு துளி கூட தேவைப்படறது இல்ல!!

மனித இனம் இல்லாவிட்டாலும் மற்ற உயிரனங்கள் பல பல கோடி ஆண்டுகள் கூட வாழும், ஆனால் எந்தவொரு உயிரினமும் இல்லாமல் 10 வருடம் கூட மனித இனத்தால் பிழைக்க முடியாது என்பதை புரிந்து
கொண்டு இனிமேலாவது மற்ற உயிர்களை மதித்து அதற்கு உதவிகள் எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை தொந்தரவு செய்யாமல் அனைத்து வாயில்களையும் அடைத்துக் கொண்டு சும்மா இருந்தாலே போதும் அதுவே பொழச்சுக்கும் !! :) :)

Thursday, December 19, 2013

பால்வெளி அண்டமும் சூரியகுடும்பமும்


பால்வெளி அண்டமும் சூரியகுடும்பமும்
கோ.இளங்கதிர்

பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) என்பது நமது சூரிய குடும்பத்தையும் சேர்த்து பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கியது. அது அண்டவெளியில் 1,00,000 ஒளி ஆண்டுகள் தூரம் நீளமும் 1,000 ஒளி ஆண்டுகள் தூரம் அகலமும் கொண்டு பரந்து விரிந்துள்ளது. நம் பால்வெளி அண்டத்தின் வயது சுமார் 1,320 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நம் சூரியகுடும்பம் ஒருமுறை பால்வெளியை சுற்றிவர சுமார் 25 கோடி ஆண்டுகள் ஆகிறது, அது கிட்டத்தட்ட நொடிக்கு 220 கி.மீ என்ற வேகத்தில் சுற்றுகிறது . நமது பால்வெளி அண்டத்தைப் போலவே பிரபஞ்சத்தில் எண்ணிக்கையில் அடங்காத கோடி அளவு விண்மீன் திரள்கள் (Galaxies) உள்ளன. இவை அனைத்தும் ஒரு பெருவெடிப்பு (Big Bang) மூலமாக உருவானவை. நம் பால்வெளி அண்டத்தைச் சுற்றி நிறைய விண்மீன் திரள்கள் உள்ளன, அதில் நமக்கு அருகில் உள்ளது ஏண்ட்ரொமெடா அண்டம் (Andromeda Galaxy) ஆகும்.  அது நம்மிலிருந்து 3 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.




ஒளிஆண்டு
       உலகிலேயே மிகவும் வேகமாக பயணம் செய்யும் ஆற்றல் பெற்றவை ஒளிக்கதிர்கள் மட்டும்தான். ஓர் ஒளிக்கற்றை ஓர் ஆண்டில் பயணம் செய்து கடக்கின்ற தூரம் தான் ஓர் ஒளியாண்டு என அழைக்கப்படுகிறது. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 299,792,458 மீட்டர்களாகும். ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஓர் ஒளி ஆண்டு என்பது 9,460,730,472,580.8 கி.மீ ஆகும். சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8 நிமிடங்கள் எடுக்கிறது. எனவே சூரியன் பூமியிலிருந்து 8 ஒளி-நிமிட தொலைவில் உள்ளதாகக் கூறலாம். இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். 

சரி, நம் பால்வெளி அண்டம் என்ன செய்கிறது? பால்வெளியின் மையத்தில் அதி பயங்கரமான கருந்துளை (Black Hole) உள்ளது. நம் பால்வெளியில் உள்ள அனைத்தும் அந்த கருந்துளையால் சிறிது சிறிதாக உள்ளிழுக்கப்பட்டு கொண்டுள்ளது. பால்வெளியானது அந்த கருந்துளையைச் சுற்றிக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால், இறுதியில் பால்வெளி அண்டம் முழுவதுமாக அந்த கருந்துளையின் மூலம் உள்ளிழுக்கப்பட்டு அழிந்துவிடும். ஆனால் அதற்கு முன்னதாகவே நமது பால்வெளி அண்டமும் ஏண்ட்ரொமெடா அண்டமும்(Andromeda Galaxy) இன்னும் 450 கோடி ஆண்டுகளில் ஒன்றுடன் ஒன்று மோதக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஏண்ட்ரொமெடா அண்டம் மணிக்கு 30,000 கி.மீ வேகத்தில் நம் பால்வெளியை நோக்கி வந்துகொண்டுள்ளது. அப்படி இரண்டும் மோதினால் மிகப்பெரிய அழிவு உண்டாகும், இரண்டு அண்டமும் சேர்ந்து ஒரு புதிய அண்டம் உருவாகக்கூடும் என்றும் கூறுகின்றனர். இவையெல்லாம் நடக்க இன்னும் பல நூறுகோடி ஆண்டுகள் ஆகும், அதற்குள் மனிதன் வெவ்வேறு கோள்களுக்குச் சென்று குடியேறி விடுவான்.

பால்வெளி அண்டம் எப்படி உருவானது? பால்வெளி அண்டம் மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரு மிகப்பெரிய வெடிப்பினால் உருவாக்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் The Big Bang Theory என்று அழைக்கப்படுகிறது. இந்த பெருவெடிப்புக்கான நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது எனவும் கூறுகின்றனர். மேலும் இந்த பிரபஞ்சம் (Universe) போன்று கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும் என்றும் தற்போது அறிந்துள்ளனர்.  இந்த பெருவெடிப்பு பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது, அதன் விளைவாக தான் இந்த பிரபஞ்சமே தோன்றியுள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள், விண்கற்கள் மற்றும்  கோள்கள் என அனைத்தும் இந்த பெருவெடிப்பின் மூலமே உருவானது. இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய வெடிப்பு ஓரே நாளில் உண்டாகவில்லை, பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக அண்டவெளியில் சுற்றித்திரிந்த கண்ணுக்கு புலப்படாத அணுக்களும் மூலக்கூறுகளும் ஒன்றோடு ஒன்று மோதுவதும் பிரிவதும் நிகழ்ந்து வந்தன. தொடர்ந்து நடந்து வந்த மோதலின் காரணமாக ஒருசில அணுக்களில் சிறிய ஈர்ப்புவிசை தோன்றி அதனைச் சுற்றியுள்ள மற்ற அணுக்களையும் ஈர்த்தது. மேலும் கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த விளைவு தொடர்ந்ததால் அணுக்களுக்கிடையிலான ஈர்ப்புவிசை அதிகரித்து அணுக்கள் அனைத்தும் ஒரு புள்ளியை நோக்கியே ஈர்க்கப்பட்டன. அதனால், ஈர்க்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தின. மேலும் மேலும் பொருட்கள் சேர்ந்துகொண்டே சென்றதால் அதன் அழுத்தமும் கூடிக்கொண்டே போனது, அதாவது ஒரு குண்டூசியின் முனை அளவுள்ள இடம் பூமியின் கணத்தைக் கொண்டிருந்தது. இவ்வாறு சிறிய இடத்திற்குள் அடைபட்ட மிக அதிக அழுத்தம் ஒரு நிலையில் அதிபயங்கர ஒளியுடன் (Hyper Nova) மிகப்பயங்கரமாக பீறிட்டுக்கொண்டு வெடித்தது. இந்த நிகழ்வுதான் ஆங்கிலத்தில் THE BIG BANG என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த வெடிப்பினால் பீறிட்ட பொருட்கள் பல கோடி ஒளியாண்டுகள் தூரம் வரை வீசியெறியப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கிறது.  

ஆம் நாம் வாழும் பூமி, பூமி இருக்கும் சூரியகுடும்பம் நட்சத்திரங்கள் என அனைத்தும் சீறற்ற வேகத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால், நேற்று இருந்த இடத்தில் நாம் இல்லை, ஏன் சென்ற மணித்துளி இருந்த இடத்தில்கூட நாம் இல்லை. நேற்று இருந்த இடத்தைவிட 8000 கி.மீ தூரம் நாம் நகர்ந்து வந்துவிட்டோம், ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. ஆனால் எப்போதோ வானில் பார்த்த நட்சத்திரங்களயும் கோள்களையும் வைத்து சோதிடம் என்று எழுதிவைத்து அதே நட்சத்திரங்கள் நகராமல் உள்ளது என நம்பி இன்றும் அதே சோதிடத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் மக்களே, சோதிடத்தில் குறிப்பிட்டுள்ள பல நட்சத்திரங்கள் நகர்ந்து சென்று இன்று காணாமலே போய்விட்டது !!.

சரி, அதை விடுவோம் !! அந்த பெருவெடிப்பு நிகழ்ந்த பின்னர் வெகுகாலம் அண்டவெளி புகைமண்டலமாக காணப்பட்டது. வெடிப்பின் தாக்கம் குறையத் தொடங்கியதும் புகையாய் இருந்த மூலக்கூறுகள் அனைத்தும் ஈர்க்கப்பட்டு ஒன்று சேரத்துவங்கின. அப்படி வெவ்வேறு மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்துதான் இன்றிருக்கும் தனிமங்கள் உருவாகின. இதில் அதிக எடையுள்ள தனிமங்கள் மட்டும் நடுவில் தங்க, எடை குறைந்த தனிமங்கள் அதைச்சுற்றி சேர்ந்தன. இப்படியாக அடுக்கடுக்காய் சேர்ந்த தனிமங்கள் ஒரு உருண்டை வடிவ கோளாய் மாறியது. உருண்டை வடிவம் எவ்வாறு வந்தது? நடுவில் தங்கிய கணமான தனிமங்கள் ஒரு உள் அழுத்ததை ஏற்ப்படுத்தி அதைச்சுற்ற வைத்தது அதனால் அடுத்து வந்த தனிமங்கள் சமமாக சேர்ந்ததால் உருண்டை வடிவம் பெற்றது. இப்படியாகத்தான் இன்றிருக்கும் ஒவ்வொறு கோளும், நட்சத்திரமும், அண்டங்களும் உருவாகின, இன்னமும் உருவாகிக்கொண்டே உள்ளன. ஆக, நம் பால்வெளி அண்டமும் மற்ற அண்டங்களைப் போல்தான் பலகோடி விண்மீன் திரள்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் எண்ணற்ற சூரியகுடும்பங்களும் நம் சூரியனை விட பெரிய விண்மீன்களும் பூமியை விட பெரிய கோள்களும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. தோராயமாக, நாம் இரவில் பார்க்கும் அனைத்து நட்சத்திரங்களும் நமது பால்வெளி அண்டத்தை மட்டுமே சேர்ந்தவையாகும். அப்படியென்றால், இந்த பிரபஞ்சம் முழுவதும் எவ்வளவு கோடி நட்சத்திரங்கள் இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் வியப்பாக உள்ளதல்லவா !!.