Thursday, December 19, 2013

பால்வெளி அண்டமும் சூரியகுடும்பமும்


பால்வெளி அண்டமும் சூரியகுடும்பமும்
கோ.இளங்கதிர்

பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) என்பது நமது சூரிய குடும்பத்தையும் சேர்த்து பல கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கியது. அது அண்டவெளியில் 1,00,000 ஒளி ஆண்டுகள் தூரம் நீளமும் 1,000 ஒளி ஆண்டுகள் தூரம் அகலமும் கொண்டு பரந்து விரிந்துள்ளது. நம் பால்வெளி அண்டத்தின் வயது சுமார் 1,320 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நம் சூரியகுடும்பம் ஒருமுறை பால்வெளியை சுற்றிவர சுமார் 25 கோடி ஆண்டுகள் ஆகிறது, அது கிட்டத்தட்ட நொடிக்கு 220 கி.மீ என்ற வேகத்தில் சுற்றுகிறது . நமது பால்வெளி அண்டத்தைப் போலவே பிரபஞ்சத்தில் எண்ணிக்கையில் அடங்காத கோடி அளவு விண்மீன் திரள்கள் (Galaxies) உள்ளன. இவை அனைத்தும் ஒரு பெருவெடிப்பு (Big Bang) மூலமாக உருவானவை. நம் பால்வெளி அண்டத்தைச் சுற்றி நிறைய விண்மீன் திரள்கள் உள்ளன, அதில் நமக்கு அருகில் உள்ளது ஏண்ட்ரொமெடா அண்டம் (Andromeda Galaxy) ஆகும்.  அது நம்மிலிருந்து 3 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.




ஒளிஆண்டு
       உலகிலேயே மிகவும் வேகமாக பயணம் செய்யும் ஆற்றல் பெற்றவை ஒளிக்கதிர்கள் மட்டும்தான். ஓர் ஒளிக்கற்றை ஓர் ஆண்டில் பயணம் செய்து கடக்கின்ற தூரம் தான் ஓர் ஒளியாண்டு என அழைக்கப்படுகிறது. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 299,792,458 மீட்டர்களாகும். ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஓர் ஒளி ஆண்டு என்பது 9,460,730,472,580.8 கி.மீ ஆகும். சூரியனில் இருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8 நிமிடங்கள் எடுக்கிறது. எனவே சூரியன் பூமியிலிருந்து 8 ஒளி-நிமிட தொலைவில் உள்ளதாகக் கூறலாம். இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். 

சரி, நம் பால்வெளி அண்டம் என்ன செய்கிறது? பால்வெளியின் மையத்தில் அதி பயங்கரமான கருந்துளை (Black Hole) உள்ளது. நம் பால்வெளியில் உள்ள அனைத்தும் அந்த கருந்துளையால் சிறிது சிறிதாக உள்ளிழுக்கப்பட்டு கொண்டுள்ளது. பால்வெளியானது அந்த கருந்துளையைச் சுற்றிக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால், இறுதியில் பால்வெளி அண்டம் முழுவதுமாக அந்த கருந்துளையின் மூலம் உள்ளிழுக்கப்பட்டு அழிந்துவிடும். ஆனால் அதற்கு முன்னதாகவே நமது பால்வெளி அண்டமும் ஏண்ட்ரொமெடா அண்டமும்(Andromeda Galaxy) இன்னும் 450 கோடி ஆண்டுகளில் ஒன்றுடன் ஒன்று மோதக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஏண்ட்ரொமெடா அண்டம் மணிக்கு 30,000 கி.மீ வேகத்தில் நம் பால்வெளியை நோக்கி வந்துகொண்டுள்ளது. அப்படி இரண்டும் மோதினால் மிகப்பெரிய அழிவு உண்டாகும், இரண்டு அண்டமும் சேர்ந்து ஒரு புதிய அண்டம் உருவாகக்கூடும் என்றும் கூறுகின்றனர். இவையெல்லாம் நடக்க இன்னும் பல நூறுகோடி ஆண்டுகள் ஆகும், அதற்குள் மனிதன் வெவ்வேறு கோள்களுக்குச் சென்று குடியேறி விடுவான்.

பால்வெளி அண்டம் எப்படி உருவானது? பால்வெளி அண்டம் மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரு மிகப்பெரிய வெடிப்பினால் உருவாக்கப்பட்டது. அது ஆங்கிலத்தில் The Big Bang Theory என்று அழைக்கப்படுகிறது. இந்த பெருவெடிப்புக்கான நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது எனவும் கூறுகின்றனர். மேலும் இந்த பிரபஞ்சம் (Universe) போன்று கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும் என்றும் தற்போது அறிந்துள்ளனர்.  இந்த பெருவெடிப்பு பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது, அதன் விளைவாக தான் இந்த பிரபஞ்சமே தோன்றியுள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள், விண்கற்கள் மற்றும்  கோள்கள் என அனைத்தும் இந்த பெருவெடிப்பின் மூலமே உருவானது. இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய வெடிப்பு ஓரே நாளில் உண்டாகவில்லை, பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக அண்டவெளியில் சுற்றித்திரிந்த கண்ணுக்கு புலப்படாத அணுக்களும் மூலக்கூறுகளும் ஒன்றோடு ஒன்று மோதுவதும் பிரிவதும் நிகழ்ந்து வந்தன. தொடர்ந்து நடந்து வந்த மோதலின் காரணமாக ஒருசில அணுக்களில் சிறிய ஈர்ப்புவிசை தோன்றி அதனைச் சுற்றியுள்ள மற்ற அணுக்களையும் ஈர்த்தது. மேலும் கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த விளைவு தொடர்ந்ததால் அணுக்களுக்கிடையிலான ஈர்ப்புவிசை அதிகரித்து அணுக்கள் அனைத்தும் ஒரு புள்ளியை நோக்கியே ஈர்க்கப்பட்டன. அதனால், ஈர்க்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தின. மேலும் மேலும் பொருட்கள் சேர்ந்துகொண்டே சென்றதால் அதன் அழுத்தமும் கூடிக்கொண்டே போனது, அதாவது ஒரு குண்டூசியின் முனை அளவுள்ள இடம் பூமியின் கணத்தைக் கொண்டிருந்தது. இவ்வாறு சிறிய இடத்திற்குள் அடைபட்ட மிக அதிக அழுத்தம் ஒரு நிலையில் அதிபயங்கர ஒளியுடன் (Hyper Nova) மிகப்பயங்கரமாக பீறிட்டுக்கொண்டு வெடித்தது. இந்த நிகழ்வுதான் ஆங்கிலத்தில் THE BIG BANG என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த வெடிப்பினால் பீறிட்ட பொருட்கள் பல கோடி ஒளியாண்டுகள் தூரம் வரை வீசியெறியப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கிறது.  

ஆம் நாம் வாழும் பூமி, பூமி இருக்கும் சூரியகுடும்பம் நட்சத்திரங்கள் என அனைத்தும் சீறற்ற வேகத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால், நேற்று இருந்த இடத்தில் நாம் இல்லை, ஏன் சென்ற மணித்துளி இருந்த இடத்தில்கூட நாம் இல்லை. நேற்று இருந்த இடத்தைவிட 8000 கி.மீ தூரம் நாம் நகர்ந்து வந்துவிட்டோம், ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. ஆனால் எப்போதோ வானில் பார்த்த நட்சத்திரங்களயும் கோள்களையும் வைத்து சோதிடம் என்று எழுதிவைத்து அதே நட்சத்திரங்கள் நகராமல் உள்ளது என நம்பி இன்றும் அதே சோதிடத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் மக்களே, சோதிடத்தில் குறிப்பிட்டுள்ள பல நட்சத்திரங்கள் நகர்ந்து சென்று இன்று காணாமலே போய்விட்டது !!.

சரி, அதை விடுவோம் !! அந்த பெருவெடிப்பு நிகழ்ந்த பின்னர் வெகுகாலம் அண்டவெளி புகைமண்டலமாக காணப்பட்டது. வெடிப்பின் தாக்கம் குறையத் தொடங்கியதும் புகையாய் இருந்த மூலக்கூறுகள் அனைத்தும் ஈர்க்கப்பட்டு ஒன்று சேரத்துவங்கின. அப்படி வெவ்வேறு மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்துதான் இன்றிருக்கும் தனிமங்கள் உருவாகின. இதில் அதிக எடையுள்ள தனிமங்கள் மட்டும் நடுவில் தங்க, எடை குறைந்த தனிமங்கள் அதைச்சுற்றி சேர்ந்தன. இப்படியாக அடுக்கடுக்காய் சேர்ந்த தனிமங்கள் ஒரு உருண்டை வடிவ கோளாய் மாறியது. உருண்டை வடிவம் எவ்வாறு வந்தது? நடுவில் தங்கிய கணமான தனிமங்கள் ஒரு உள் அழுத்ததை ஏற்ப்படுத்தி அதைச்சுற்ற வைத்தது அதனால் அடுத்து வந்த தனிமங்கள் சமமாக சேர்ந்ததால் உருண்டை வடிவம் பெற்றது. இப்படியாகத்தான் இன்றிருக்கும் ஒவ்வொறு கோளும், நட்சத்திரமும், அண்டங்களும் உருவாகின, இன்னமும் உருவாகிக்கொண்டே உள்ளன. ஆக, நம் பால்வெளி அண்டமும் மற்ற அண்டங்களைப் போல்தான் பலகோடி விண்மீன் திரள்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் எண்ணற்ற சூரியகுடும்பங்களும் நம் சூரியனை விட பெரிய விண்மீன்களும் பூமியை விட பெரிய கோள்களும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. தோராயமாக, நாம் இரவில் பார்க்கும் அனைத்து நட்சத்திரங்களும் நமது பால்வெளி அண்டத்தை மட்டுமே சேர்ந்தவையாகும். அப்படியென்றால், இந்த பிரபஞ்சம் முழுவதும் எவ்வளவு கோடி நட்சத்திரங்கள் இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தால் வியப்பாக உள்ளதல்லவா !!.